எங்களை பற்றி
சமூகத்தேவைகளின் காலச்சுழற்சிக்கேற்ப கல்வி, பணி, வணிகம் பொருட்டு 1970 -களின் முற்பகுதிகளில் இலண்டன் மாநகரில் குடியேறிய மொழி மற்றும் இனப்பற்றுக்கொண்ட நம் முன்னோர்களால் தமிழர் முன்னேற்றக் கழகம் 1975 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
தோன்றிய நாள் முதற்கொண்டு இன்றளவும் தமிழ் மொழி வளர்ச்சிக்குத் அருந்தொண்டாற்றி, நம் பண்பாடு, கலாச்சாரம், ஒற்றுமை நம்மிடையே பேணிக்காப்பதுடன் அதை உலகிற்கு பறைசாற்றி நம் இளந்தளிர்கள் வாழையடி வாழையாகத் தழைத்தோங்கி தமிழ் வழி பயணிக்க நம் வாழ்வில் பெரும்பங்காற்றி வருகிறது. நம் மாணவச் செல்வங்கள் அன்னைத் தமிழை அறிந்து, கசடற கல்வி பெறுவதற்குத் திருவள்ளுவர் தமிழ்ப்பள்ளியை நிறுவியதோடல்லாமல் தாய்த்தமிழகத்திலிருந்து இலண்டனுக்கு வருகைதரும் அறிஞர் பெருமக்களை வரவேற்று உரையாற்றச் செய்தும், கலந்துரையாடலுக்கு வழிவகுத்து இலக்கிய முயற்சிகளுக்குத் துணைநிற்பதும் என பன்முகப் பணிகளைத் தமிழர் முன்னேற்றக் கழகம் தொய்வின்றி தொடர்ந்து செய்துவருகின்றது. இவ்வமைப்பின் அழைப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய அறிஞர் பெருமக்கள் இன்றளவும் நம்முடன் தொடர்பில் இருந்து நம் மொழி வளர்ச்சிக்கு வழிகாட்டிவருவதும் மகிழ்ச்சிக்குரிய செய்தியாகும். தமிழகத்தில் பேரிடர் ஏற்படும் காலங்களிலும், தமிழர்களுக்கு உலக அளவில் நெருக்கடி நேரும்பொழுதும் இலண்டன் தமிழர் முன்னேற்றக் கழகம் தம்மால் ஆன உதவிகளை என்றென்றும் செய்துவருகின்றது.
இவ்வாறாக சற்றொப்ப அரைநூற்றாண்டாகத் தமிழ்ப்பணியாற்றி வரும் தமிழர் முன்னேற்றக்கழகம் பீடுநடை போடுவதற்கு காரணமான உங்களைப்போன்ற தமிழ் நலவிரும்பிகளை வணங்கி தம் பொன்விழாவினை விரைவில் கொண்டாடும் தருணத்தில் தங்களின் நெறிகாட்டலையும், வாழ்த்துகளையும் எதிர்நோக்கியுள்ளது.
பள்ளியை பற்றி
14.10.1975 இல் தமிழர் முன்னேற்றக் கழகம் தொடங்கப்பட்டவுடன் திருவள்ளுவர் தமிழ்ப் பள்ளியின் ஆட்சிப்பொறுப்பினை ஏற்றுக்கொண்டது. ஏழு மாணவர்களுடன் தொடங்கப்பட்ட திருவள்ளுவர் தமிழ்ப் பள்ளி இப்பொழுது இருநூற்று எழுபதுக்கும் மேற்பட்ட மாணவர்களுடன் இயங்குகின்றது.
ஐரோப்பிய நாடுகளில் தொடங்கப்பட்ட முதல் தமிழ்ப்பள்ளி என்னும் பெருமை இப்பள்ளிக்கு உண்டு. பல்வேறு ஆசிரியர் பெருமக்கள் கல்விப்பணியாற்றி இப்பள்ளியின் வளர்ச்சிக்குப் பெரிதும் பாடுபட்டுள்ளனர்.
திருவள்ளுவர் தமிழ்ப் பள்ளியில் இசை வகுப்பும், நாட்டிய வகுப்பும் தொடங்கப்பட்டன. இதனால் பள்ளி விழாக்களிலும், பொங்கல் திருவிழாக் காலங்களிலும் திருவள்ளுவர் தமிழ்ப் பள்ளி மாணவர்கள் தங்கள் இசை, நாட்டியத் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் நடத்தும் க. பொ. த. சாதாரணம் (O Level) தேர்வில் 20 மாணவர்களும், உயர்தரம் (A Level) 15 – க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒவ்வொரு ஆண்டும் தேறிவருகின்றனர்.
திருவள்ளுவர் தமிழ்ப் பள்ளி வாரந்தோறும் சனிக்கிழமைகளில் நடைபெறுகின்றது. இப்பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் முறையான ஆசிரியர் பயிற்சி பெற்றவர்கள் ஆவர். தமிழ்ப்பற்றுடனும் தொண்டுணர்வுடனும் தமிழைப் பயிற்றுவிக்கும் பணியில் இவர்கள் ஈடுபட்டுள்ளனர். இலண்டனுக்கு வருகைதரும் தமிழ்க் கல்வியாளர்கள் இத் திருவள்ளுவர் தமிழ்ப் பள்ளிக்கு வருகைபுரிந்துள்ளனர்.
திருவள்ளுவர் தமிழ்ப் பள்ளி தங்கள் பள்ளி மாணவர்களுக்குத் தேவையான பாட நூல்களை வழங்கிப் பயிற்றுவிப்பதுடன், தேர்வுகளையும் பொறுப்பேற்று நடத்தி வருகின்றது. தமிழ்க் குழந்தைகள் கல்வியையும் நற்பண்புகளையும் பெறும் இடமாக இத் திருவள்ளுவர் தமிழ்ப் பள்ளி விளங்குகின்றது.
திருவள்ளுவர் தமிழ்ப் பள்ளி இலக்கிய விழாக்கள், ஆண்டு விழாக்களை நடத்துவது, சிறப்பு மலர்களை வெளியிடுவது, அறிஞர் பெருமக்களை அழைத்துச் சிறப்பிப்பது போன்ற உயரிய பணிகளைத் தொடர்ந்து செய்துவருகின்றது. பொன்விழா ஆண்டினைக் கொண்டாடுவதற்கு அணியமாகிவரும் திருவள்ளுவர் தமிழ்ப் பள்ளி, இலண்டனில் தமிழ்க் கல்வி வளர்ச்சிக்குப் பெரும் பங்களிப்பை நல்கிவருகின்றது.